கடல், வானம், நான் கூடவே நீயும்!


கிட்டத் தட்ட விடிந்த வானம்
கிட்டவே தெரியும் வட்ட நிலா
தொட்டுத் தொட்டுத் தலை கோதும் காற்று

எதிரில் கண்ணில் படுவதெல்லாம்
கருநீலம் மட்டுமே
கடலையும் வானத்தையும் 
ஒரு கோடு தான் பிரிக்கிறது

என் முன்னே ஓயாமல் 
வந்து வந்து போகும்
கடலலையும் அதன் சத்தமும்
என்னிடம் உன் 
நினைவுகளை நினைவுபடுத்துகிறது

நானும் ஓயாமல் 
உன் நினைவில் 
தான் இருக்கிறேன்
ஆனால், அலையும் காற்றும் 
அவைகள் தான் ஞாபகப் படுத்தியதாய் நினைத்துப்
பெருமிதம் கொள்கின்றன; ஆனந்தமாகின்றன

ஆகட்டும்...

நானும் உண்மை சொல்லாமல்
விட்டு விட்டேன்!

உன் நினைவும், நிலவும்
அவைகளின் ஆனந்த சத்தமும்
மொத்தமாய் என்னை மௌனத்தில்
ஆழ்த்திவிட்டன

அவ்வப்போது
மேகம் நகர்கிற போது தான்
நேரம் நகர்கிறதென்று புரிகின்றது!

            ~ ஜெய் கபி 

Comments

Post a Comment

Popular Posts